Wednesday, July 31, 2024

குடும்பத்துடன் காசி யாத்திரை நிறைவுப் பகுதி 6 - சமாராதனை

 குடும்பத்துடன் காசி யாத்திரை நிறைவுப் பகுதி 6 - சமாராதனை:

இராமேஸ்வரத்தில் ஆரம்பித்து அலகாபாத், காசி, கயா என்று எல்லா புண்ணிய ஸ்தலங்களிலும் ஸ்ரார்த்தம் செய்து பிண்டம் இட்டு பித்ரு காரியங்களை நிறைவாகச் செய்ததைப் பற்றி போன பகுதிகளில் பார்த்தோம். 3.6.2024 அன்று காலை 6.30 மணி அளவில் ஊர் வந்து சேர்ந்தாகிவிட்டது. 

கிரிஜா மன்னிக்கு  கோவிலில் வேண்டுதல் இருந்ததால்  சமயபுரம் மற்றும் வைதீஸ்வரர் கோவில் செல்ல வேண்டும் என்றார். எனவே வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக நான், கௌரி, மன்னி மூவரும் 10.30 மணி அளவில்  கார் புக் செய்து கொண்டு  முதலில் சமயபுரத்திற்குச் செல்ல முடிவு செய்தோம்.

அன்று எங்களுக்கு எங்களது நாத்தனார் சியாமளா அக்கா அகத்தில் சாப்பிடச் சொல்லி இருந்தார்கள். நாங்கள் சிற்றுண்டியை முடித்து விட்டு புளி சாதம், தயிர் சாதம் பேக் செய்து எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டோம்.

வழி முழுவதும் கிண்டலும் கேலியும் தான். மகளிர் மட்டும் செல்லும் பயணத்தில் ஆண்கள் தலை உருளுவதைத் தடுக்கத் தான் முடியுமா? பாவம் எங்கள் டிரைவர் தமிழ்ச்செல்வன்.  கிரிஜா மன்னி அந்த தமிழ்ச்செல்வனையும் விட்டு வைக்கவில்லை. அதற்குள் சமயபுரம் வந்துவிட்டது.

சமயபுரம்:

சமயபுரத்து மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன். இந்தக் கோவிலுக்கு பத்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.  நாங்கள் சென்ற போது மணி 12.30 ஆகிவிட்டது.


இங்கு சிறிய அளவில் வெள்ளியில் உடல் பாகங்கள் அதாவது, கை, கால், கண், மூளை, தொண்டை, முழு உடல், சிறியவர், பெரியவர், ஆண், பெண் என்று தனித்தனியாக வெள்ளி பொம்மைகள் விற்கிறார்கள். 


அவற்றை வாங்கி சமயபுரத்தாளுக்கு வேண்டிக் கொண்டு காணிக்கையாக உண்டியலில் போட்டால் அந்த பாகத்திலிருக்கும் உபாதைகள் நீங்கி ஆரோக்கியத்துடன் வாழலாம் என்பது ஐதீகம்.  குடுப்பத்தினரின் ஆரோக்கியத்திற்காக இந்த வேண்டுதலை யார் வேண்டுமானாலும் நிறைவேற்றலாம்.  நாங்கள் குடுபத்தினர் அனைவருக்கும் உடல் வாங்கி சாற்றினோம். அதனுடன் சிலருக்கு கண். சிலருக்கு கால் என்று எழுதி வைத்துக் கொண்டு மொத்தமாக வாங்கி சிறியவர், பெரியவர் எல்லாருடைய உடல் நலத்திற்காகவும் வேண்டிக் கொண்டு 28 உடல் பாகங்களும் தனித்தனி பிரார்த்தனையாக 8 உடல் பாகங்களும் வாங்கிக் கொண்டோம். 

உள்ளே மிகவும் கூட்டமாக இருந்தது, எங்களுக்கு முன்னால் ஒரு V.I.P. சென்றிருக்கிறார். அவருக்காக ஏதோ ஒரு வாயில் திறக்க, மன்னி எங்களையும் அந்த வழியில் அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.  அருமையான தரிசனம். அம்மன் முகம் அத்தனை பொலிவு. கண்களை எடுக்கவே முடியவில்லை. மனமார தரிசனம் செய்து விட்டு 'லோகா சமஸ்தா சுகினோ பவந்து' என்று வேண்டிக் கொண்டு, கோவில் பிரசாதமாக சர்க்கரை பொங்கலும் புளி சாதம் ட்ரைவருக்கும் வாங்கிக் கொண்டு வெளியில் வந்தோம்.  காரிலேயே அமர்ந்து நாங்கள் சியாமளா அக்கா வீட்டிலிருந்து கொண்டு சென்ற சாப்பாடு மற்றும் பிரசாதங்களை ட்ரைவருடனும் பகிர்ந்து சாப்பிட்டோம். வழியில் டீ, காஃபி குடித்து விட்டு  வைதீஸ்வரர் கோவிலை நோக்கிப் புறப்பட்டோம்.

வைதீஸ்வரர் கோவில்:

வைதீஸ்வரர் கோவில் பிரம்மாண்டமான கோபுரத்துடன் கம்பீரமாக இருக்கிறது.  தீராத நோயையும் தீர்த்து வைப்பவர் இந்த வைதீஸ்வரர்.



அங்காரகன் என்னும் செவ்வாய் கிரஹத்தின்  தொழு நோய் தீர்க்க சிவன், வைத்தியநாத ஸ்வாமியாய்  எழுந்தருளிய ஸ்தலம்  இந்தக் கோவில். தேவாரப் பாடல் பெற்ற செவ்வாய் கிரஹத்தைக் குறிக்கும் இந்த ஸ்தலம் நவகிரகக் கோவில்களில் ஒன்றாகும்.  அம்பாள் தையல் நாயகித் தாயார். 

பிரகாரங்கள் பெரிதாக இருக்கின்றன. சுற்றிக் குளத்துடன் தெய்வாதீனமாக இருக்கிறது இந்தக் கோவில்.



இங்கிருக்கும் சித்தாமிர்த்தக் குளத்தில் குளித்தால் பிணிகள் பறந்து போகும் என்பது நம்பிக்கை. இங்கு மிளகு, உப்பு கலந்த வெல்லத்தினை நீரில் கரைத்தால் நோய் நொடி இல்லாமல் வாழலாம் என்று  மக்கள் நம்புகிறார்கள்.  கோவிலிலேயே மிளகு, உப்பு, வெல்லம் வைத்திருக்கிறார்கள். நல்லவேளையாக யாரையும் குளத்தில் கரைக்கவிடுவதில்லை. அவர்கள் ஒரு பாத்திரத்தில் குளத்து நீரை வைத்திருக்கிறார்கள். மிளகு, உப்பு, வெல்லம் வாங்கி அங்கேயே கரைத்து வேண்டிக் கொள்ளலாம். நாங்களும் வாங்கி எல்லாருடைய க்ஷேமத்திற்கும் வேண்டிக் கொண்டு கரைத்தோம். 


வைதீஸ்வரரையும் தையல் நாயகியையும் மனமார வேண்டிக் கொண்டு மன்னி கொண்டு வந்திருந்த புடவை வேஷ்டியை ஸ்வாமிக்குச் சார்த்தும் படி கூறிவிட்டு காணிக்களைச் செலுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பும் போதே மணி 5.30 ஆகிவிட்டது.  கோவில் பிரார்த்தனைகளை நிறைவாக நிறைவேற்றிய திருப்தியுடன்   அங்கிருந்து கிளம்பினோம்.

அங்கிருந்து புறப்பட்டு திருச்சியில் A2B யில்  ரவா தோசை, பொடி தோசை, தோசை, ஜிலேபி என்று ஜாலியாக டின்னர் சாப்பிட்டோம்.  டிரைவரும் சாப்பிட்ட பின காரில் திரும்பும் போது.  மறுநாள் இராமேஸ்வரத்திற்கு யார் யார் போவது என்று பேச்சுவார்த்தை நடந்தது எங்களிடையே. உண்மையில் எங்கள் எல்லாருக்குமே மீண்டும் அங்கு செல்ல ஆசை தான். ஆனால்  அதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன.

வழியில் எங்கள் உரையாடல்:

ஏண்டி, உங்க அண்ணா என்னமோ பஸ்ல தான் இராமேஸ்வரம் போணும்னு சொல்றா? இது கிரிஜா மன்னி.

எல்லாரும் போக வேண்டியதில்லையாம் மன்னி என்றேன் நான்.

போடி நம்ம திரும்பியும் சேர்ந்து எப்போ இராமேஸ்வரம் போறது. மறுபடி வேன் புக் பண்ணலாம்னு நான் சொன்னா அதெல்லாம் முடியாதுங்கறார் உங்க அண்ணா.  என்னமோ பஸ் புடிச்சு கரூர் போறதாம் அங்கேர்ந்து இன்னொரு பஸ் புடிக்கறதாம். யாரால முடியுமோ வாங்கோன்னா என்ன அர்த்தம்? இதெல்லாம் நடக்கற காரியமா?  நம்ம அவாளுக்கு எதிரா ஒரு ஐடியா பண்ணுவோம் என்ற மன்னி,  டிரைவரைப் பார்த்து தமிழ் நீ என்ன பண்ற நாளைக்கு காலைல மூணு மணிக்கு வந்து லேடிஸ் எங்களை இராமேஸ்வரத்துக்கு கூட்டிட்டு போய்ட்டு அபிஷேகம் முடிஞ்சதும் கூட்டிட்டு வந்துடு இந்த ஜெண்ட்ஸ் எல்லாம் எப்படியோ எதயோ புடிச்சு வரட்டும். என்ன? என்றதும் தமிழ் நடுங்கி விட்டான்.  
சார் சொல்லட்டுங்க நான் வந்துடறேன் என்று அவன் சொல்ல, அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ இராமேஸ்வரம்லேர்ந்து வந்ததும் ரெண்டு நாள் தலைமறைவாயிடு.  இரண்டு நாள் கழிச்சு வந்து என்னையும் சாரையும் திருச்சி ஏர்ப்போர்ட்ல விட மட்டும் நீ வந்தா போதும் என்று மன்னி சொன்னதும் நானும் கௌரியும் அடக்கமாட்டாமல் சிரித்து விட்டோம். நான் ஏதோ கௌரவமா கார்  ஓட்டி நல்ல கஸ்டமர் ரிலேஷன்ஷிப் வெச்ச்ருக்கேன் அதுக்கே பங்கம் வந்துடும் போல இருக்கே என்ற தமிழ்செல்வன் இரண்டு நாட்கள் எங்கள் வீட்டுப் பக்கமே வரவில்லை என்பது வேறு விஷயம். 
இப்படியாக நாங்கள் அரட்டை அடித்துச் சிரித்து மகிழ்ந்து ஊர் வந்து சேர்ந்த போது இரவு மணி 10.30 ஆகிவிட்டது. 

நாங்கள் வீடு வந்து சேர்ந்ததும் அனந்தன் அண்ணா கிரிஜா மன்னியே அருகே அமரச் சொன்னதுமே மன்னிக்கு இது இராமேஸ்வரம் பற்றிப் பேசத் தான் என்று புரிந்துவிட்டது. நாங்கள் பெண்கள் ஐடியா போட்டது போலவே ஆண்களும் கூட்டு ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். முதலில் எல்லாரும் இராமேஸ்வரம் செல்வதாகத் தான் நினைத்தோம். ஆனால் குடும்பத்தில் ஒருவர் சென்றால் போதுமானது என்பதனால் ஒரு வழியாக ஒரு மனதாக நானும், சீதாராமனும் மட்டும் கங்கை நீருடன் பஸ்ஸில் இராமேஸ்வரம் சென்று வரலாம் என்று இருக்கிறோம். அதற்கு அடுத்த நாள் விடியற்காலை 3 மணிக்கே எழுந்து குலதெய்வ வழிபாட்டுக்குச் செல்ல வேண்டும்.   எல்லாரும் சென்று வந்தால் அலைச்சல் அதிகமாகிவிடும். டயர்ட் ஆகிவிடும் அதனால் தான் இந்த ஏற்பாடு என்று கூறி ஒரு வழியாக மன்னியை கன்வின்ஸ் செய்தார் அண்ணா. மன்னியை கன்வின்ஸ் செய்யுமுன்பே இரண்டு பேருக்கு மட்டும் பஸ்ஸில் டிக்கெட் புக் செய்தாகி விட்டது என்பது உங்களுக்கும் எனக்கும் இடையில் மட்டும் இருக்கட்டும். 
நாங்கள் ஒன்று நினைக்க, ஆண்கள் ஒன்று நினைக்க, டிரைவர் கண்ணில் படாமல் தப்பித்துவிட, தெய்வம் ஒன்றை நினைத்து அதையே நடத்திக் கொண்டார். வேறென்ன சொல்ல?

மீண்டும் இராமேஸ்வரம்:

இராமேஸ்ரத்திலிருந்து வேணி மாதவராய் உருவகம் செய்து பூஜித்த மணலை எடுத்துக் கொண்டு போய் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் 'ஓம் நமசிவாயா' என்று சொல்லி கரைத்தாகி விட்ட்து, திரிவேணி சங்கமத்தில் கங்கையிலிருந்து கேனில்  எடுத்து வந்த கங்கை நீரை இராமேஸ்வரம் எடுத்துச் செல்ல வேண்டும்.   

4.6.2024 காலை 3 மணிக்கே அனந்த அண்ணாவும் சீதாராமனும் மகாதானபுரத்திலிருந்து கிளம்பினார்கள்.  இராமேஸ்வரத்தில் எங்களுக்கு தீர்த்த ஸ்ரார்த்தம் செய்து வைத்த ஸ்ரீராம் வாத்தியார் அவர்களை கோவிலில் சந்தித்தார். 



நாங்கள் கொண்டு சென்ற கங்கை நீரை வாத்தியார் ஸ்ரீராம் அவர்களின் உதவியுடன் இராமநாத ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யக் கொடுத்து வேண்டிக் கொண்டு அம்பாள் பர்வதவர்த்தினித் தாயாரையும் ஜோதிர் லிங்கத்தையும் தரிசித்து வணங்கிவிட்டு வாத்தியார் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தவர்கள் அகத்தில் லஞ்ச் சாப்பிட்ட பின் பஸ்ஸில் இரவு மகாதானபுரம் வந்து சேர்ந்தார்கள்.

இப்படியாக இராமேஸ்வரத்தில் ஆரம்பித்த எங்களது காசி யாத்திரை தங்கு தடையின்றி, மன நிறைவுடன் இராமநாதருக்கு அபிஷேகம் செய்து நிறைவடைந்தது. 

குலதெய்வம் கோவில்:

எங்கள் குலதெய்வம் மலயாமருங்க அய்யனார் மற்றும் தாயார் மங்களாம்பிகா. இந்தக் கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. 

5.6.2024 விடியற்காலை 4 மணிக்கு மாகாதானபுரத்திலிருந்து வேன் வைத்துக்கொண்டு அனந்தன் அண்ணா, கிரிஜா மன்னி, நான், என் கணவர் ஜெயராமன், சீதாராமன், கௌரி, ரகு, சாரதா எல்லாருமாக எங்கள் குல தெயவ வழிபாட்டிற்குப் புறப்பட்டோம்.  எங்களது பெரியப்பா மகன் ராமமூர்த்தியும் அவர் மனைவி ஈஸ்வரி மன்னியும் திருச்சியில் எங்களுடன் இணைந்து கொண்டார்கள். பெரியப்பாவின் பெரிய மகனும் எங்கள் குடும்பத்தில் பெரியவருமான இராதாகிருஷ்ணன் அண்ணாவும் கல்யாணி மன்னியும் நேரே கோவிலுக்கு வந்துவிட்டார்கள். அங்கு நாங்கள் மாவிளக்கு போட்டு புஜை செய்தோம். என் மாமியாரின் வருஷாப்தீகத்தை குடும்பமாகச் சேர்ந்து செய்து விட்டு, காசி யாத்திரை முடித்த பின் குலதெய்வ கோவிலுக்குச் சென்று குலதெய்வ வழிபாட்டையும் குடும்பத்துடன் முடித்தது மனதிற்கு நிறைவாக இருந்தது.  


நாங்கள் பூஜை முடித்து அங்கு சத்திரத்தில் சாப்பிட்டு விட்டு 3 மணி போல் கிளம்பி ராமு அண்ணா தம்பதியை திருச்சியில் இறக்கிவிட்டு ஊர் வந்து சேர்ந்தோம். எங்கள் குலதெய்வ வழிபாடு பற்றி அடுத்த பகுதியில் விரிவாக எழுத உள்ளேன்.  காத்திருக்கவும்.

அமாவாசை:

6.6.2024 அன்று அமாவாசை.  சகோதரர்கள் நால்வரும் சுந்தர் மாமாவுடன் கருப்பத்தூர் சென்று அங்கு காவிரி ஆற்றில் நீராடி தர்ப்பணம் செய்து விட்டு வந்தனர்.  வந்ததும் அகத்திலேயே அண்ணாவின் சமையல். எங்கள் மாமியாரிடம் நான் எப்போழுதும் வியந்து கேட்பது எப்படி மகன்களுக்கும் எல்லா வேலைகளையும் செய்ய  பழக்கினீர்கள் என்பது தான். எல்லாருமே எல்லாம் செய்வார்கள்.  அண்ணாவின் சேப்பங்கிழங்கு ரோஸ்ட் ரொம்பப் பிரசித்தம். அவர் அதை செய்திருந்தார். நாங்கள் அன்று வாஷிங் மெஷினில் தோய்க்க வேண்டிய துணிகளைப் போட்டு உலர்த்தினோம். அமாவாசை அன்று கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்தோம் நாங்கள். 

சாயங்காலம் நானும் தம்பி ரகுவும் அடுத்த நாள் நடக்கவிருக்கும் சமாராதனையில் கலந்து கொள்ள ஊரிலுள்ள எல்லாரையும் அழைப்பதற்காகச் சென்றோம். லேசாக தூறிக் கொண்டிருந்தது. குடையுடன் சென்று எல்லாரையும் அழைத்துவிட்டு வர இரவு 8.30 மணி ஆகிவிட்டது.

கங்கா சமாராதனை:

7.6.2024 அன்று எங்களது இல்லத்தில் கங்கா சமாராதனை செய்தோம். காலை குளித்து மடிசாரு கட்டிக் கொண்டு, ஸ்வாமிக்கு பூ வைத்து கோலம் போட்டு பூஜை அறையை ரெடி செய்தோம். காசியிலிருந்து கொண்டு வந்திருந்த கங்கைச் சொம்புகள், காசிக் கயிறு இவற்றை பூஜையில் வைத்தோம்.  


ரேவதி அக்கா, ஈஸ்வரன் அத்திம்பேர் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். என் பெற்றோர் உட்பட ஊரில் அழைத்தவர்கள் எல்லாரும் கலந்து கொள்ள  கங்கா பூஜை தோடங்கியது. சுந்தர் மாமா பூஜை செய்து வைத்தார்.



எப்பொழுதும் சுறுசுறுப்பாக ஓடி சமையல் வேலைகள் எல்லாவற்றையும் செய்யும் எங்கள் நாத்தனார்களுக்கு ரெஸ்ட் கொடுக்கும் விதமாக சமையலுக்கு ஆள் போட்டு விட்டதால், ரிலாக்ஸாக பூஜையில் கலந்துகொண்டு அமர்ந்திருந்த எங்கள் சியாமளா மற்றும் விஜயா அக்கா மற்றும் ரேவதி அக்காவை என் ஃபோனில் 'க்ளிக்'கினேன் நான்.

எங்களது இன்னொரு அக்காவான ஜானகி அக்கா சமாராதனைக்கு வர முடியவில்லை,  பூஜை முடிந்ததும் சியாமளா அக்காவும் ரேவதி அக்காவும் ஆரத்தி எடுத்தனர்.

பூக்களால் நிரம்பி பூஜை அறையே மணத்தது. கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. பெரியோர்களின் ஆசியும் கடவுளின் அனுகிரஹமும் பரிபூரணமாகக் கிடைத்த திருப்தி மனதில் நிறைந்தது. 


வடை, பாயசத்துடன் சமாராதனை சமையல்.  ஊரார் எல்லாருக்கும் பரிமாறி வெற்றிலை பாக்குடன் காசிக் கயிரும் கொடுத்தோம். மூன்று வார லீவில் ஊருக்கு வந்து எல்லாரும் குடும்பமாய் மாமியாருக்கு திதி முடித்து,  காசி யாத்திரை முடித்து சமாராதனையையும் நிறைவாகச் செய்தோம். 


குடும்பத்துடன் ஒற்றுமையாகச் செய்யும் எந்த ஒரு செயலும் குடும்ப க்ஷேமத்திற்கும் மன நிம்மதிக்கும் வழி வகுக்கும்.

சமாராதனைக்கு ஆன செலவு:

சமாராதனைக்கு ஆன  செலவு:             10000.00
(சாப்பாடு,  தட்சணை எல்லாம் சேர்த்து)

குடும்பத்துடன் காசி யாத்திரைக்கு ஆன  செலவுகள்:

வரிசை எண்

விளக்கங்கள்

செலவுகள்

Rs.

1

இராமேஸ்வரத்தில் ஆன மொத்த செலவு

60600.00

2

அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் ஆன மொத்த செலவு  

  53780.00

3

காசியில் ஆன மொத்த செலவு

291200.00

4

 கயாவில் ஆன மொத்த செலவு

16420.00

5

 காசியில் தம்பதி பூஜைக்கான மொத்த செலவு

10435.00

6

சமாராதனை மொத்த செலவு

10000.00

 

குடும்பத்துடன் காசி யாத்திரைபயணத்தில் 10 பேராகச் சென்றதில் ஆன மொத்த செலவு

4,42,435.00



இத்துடன் குடும்பத்துடன் காசி யாத்திரை தொடர் நிறைவு பெற்றது. ஆறு பாகங்களைக் கொண்ட இந்தத் தொடரில் எங்கள் குடும்ப வழக்கப்படி நாங்கள் செய்த ஸ்ரார்த்தம், பித்ரு காரியங்கள், அதற்கான செலவுகள் எல்லாவற்றையும் பகிர முயன்றுள்ளேன்.     இந்தப் பயணத்தொடர் நிறைவு பெற்றாலும் எங்களது பயணங்களும் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதும் என்றென்றும் தொடரும். உங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் கமெண்டில் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

நன்றி நவிலல்:

முதல் நன்றி எங்கள் முன்னோர்களுக்கு.

நினைத்துப் பார்க்க முடியாத இந்த சூறாவளி சுற்றுப் பயணத்திற்கு வித்திட்ட அனந்தன் அண்ணா, கிரிஜா மன்னிக்கு எங்கள் நன்றிகள்.

வேலையிலிருப்பவர்களுக்கு சரியான சமயத்தில் விடுமுறை கிடைத்ததற்கும் எங்கள் நன்றிகள். சீதாராமனும் ரகுவும் வெளிநாட்டில் முக்கிய பொறுப்பில் இருந்தாலும்  ப்ரொஃபஸர் ஜெயராமன் மற்றும் ஆசிரியை சாரதா தன் பிஸி வேலையிலும் கடமையிலும் இத்தனை நாட்கள் எங்களுடன்  வந்து எங்களுக்குப் பக்கபலமாக இருந்ததற்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.

எங்களுடன் வர சம்மதித்து எங்களுக்கு வழி காட்டி சிரத்தையாக எல்லாவற்றையும் செய்து முடிக்க உறுதுணையாக இருந்த எங்கள் குடும்ப உறுப்பினரும் எங்கள் சாஸ்திரிகளுமான சுந்தர் மாமாவுக்கும் விஜயா அக்காவுக்கும் எங்கள் நமஸ்காரங்கள்.

மூன்று வாரங்கள் எங்களை அனுப்பிக் கொடுத்து சமாளித்த எங்களது குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு எங்களது அன்பான நன்றிகள்.

எங்களுக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் (9 கஜ புடவைகள்) கொடுத்து எங்களுக்கு பக்க பலமாக இருந்த சியாமளா அக்கா மற்றும் இராதகிருஷ்ணன் அத்திம்பேருக்கு எங்கள் நமஸ்காரங்கள்.

ஃபோட்டோ க்ரெடிட்ஸ் முதலில் முக்கியமாக கௌரிக்கு. அடுத்து என் கணவர் ஜெயராமன் மற்றும் தம்பி ரகுவுக்கு. இறுதியானாலும் மறக்காமல் மாதங்கியான எனக்கும் க்ரெடிட்ஸ் உண்டு.

பணப் பொறுப்பை தனியாகக் கையாண்டு சிறப்பாக நிறைவேற்றிய ரகுவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

எந்த வித தடங்கலும் இல்லாமல் இந்த யாத்திரை நிறைவேற அனுக்கிரஹம் புரிந்த கடவுளுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்.

மொத்தத்தில் அற்புதமான பயணத்திற்கு வித்திட்ட உறவுகளுக்கும் முன்னோர்களுக்கும் ஆண்டவனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
  

குடும்பத்துடன் காசி யாத்திரை தொடர் முற்றும்


பயணங்கள் தொடரும். 

மாதங்கி ஜெயராமன்
பெங்களூரு.

மற்ற பகுதிகளுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 1 – இராமேஸ்வரம்
படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.    https://mathangiyinmanam.blogspot.com/2024/06/1_36.html

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 2 –  பிரயாக்ராஜ் என்னும் அலகாபாத்: 
படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 3 -  வாரணாசி என்னும் காசி: 
படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 4 -  கயா: 
படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 5 - காசியில் தம்பதி பூஜை: 
படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

பயணங்கள் தொடரும். 

மாதங்கி ஜெயராமன்
பெங்களூரு.

No comments:

Post a Comment

எங்கள் பெரியம்மா என்னும் சகாப்தம்

  எங்கள் பெரியம்மா சுப்பலக்ஷ்மி என்கிற சத்யபாமா: எங்கள் அம்மாவின் அக்கா ' சுப்பலக்ஷ்மி' என்கிற 'சத்யபாமா ' எல்லாராலும் '...