இந்த புனிதமான இடத்திற்கு வாழ்வில் ஒரு முறையாவது கண்டிப்பாகச் செல்லவேண்டும் என்று தோன்றியது. இந்த இடத்தில் ஒரு தெய்வீக ஆற்றல், பாசிடிவ் வைப்ரேஷன் இருப்பதை உணர முடிந்தது. இந்த இடத்தை தூய்மையாக வைத்திருக்கலாம், வைத்திருக்க வேண்டும். அதற்கு இந்தியர்களாகிய நாம் கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆணித்தரமாகத் தோன்றியது.
'போட்'டில் எங்களுக்கு பூஜை செய்து வைக்க அந்த ஊர் வாத்தியார் அதாவது பண்டா வந்தார். அவர் தான் எங்களுக்கு வேணி தான பூஜை செய்து வைத்தார். போட்டில் அமர்ந்தபடி, கணவரை தன் மனைவிக்கு தலை வாரி, பின்னல் போடச் சொன்னார். என் கணவருக்கு பின்னத் தெரியும் என்பதே அன்று தான் எனக்குத் தெரிந்தது. (எனக்கு மட்டுமில்லை எல்லா மனைவிகளுக்கும் தான்). முகம் பார்க்கும் கண்ணாடியில் முகம் பார்த்து சரியாக இருக்கிறதா என்றும் கேட்க வேண்டுமாம். பின்னுவதே பெரிய விஷயம் இதில் தவறென்ன? சரி என்ன? பின்னி முடித்த பின் கணவரைத் தன் கையால் மனைவியின் தலை முடியின் நுனியில் சிறிதளவு வெட்டி அதனையும் நதிக்கு தானமிடும் படி சொன்னார் அந்தப் பண்டா. வாழ்க்கையில் ஒரு முறை தான் இதனை செய்ய வேண்டுமாம். மிகவும் வித்தியாசமான அனுபவம்.
முடி நதியில் இட்டதும் நேராக உள்ளே சென்று விடுகிறது. மேலே மிதப்பதில்லை. சரஸ்வதி நதி உள் இழுத்துக் கொள்வதாகவும் இது இந்த நதியின் சிறப்பு என்றும் கூறுகிறார்கள்.
திரிவேணி சங்கமத்தில் கங்கையின் நிறமும் யமுனையும் நிறமும் வேறுபட்டு இருப்பதால் அந்த இரண்டு நதிகளையும் பிரித்துப் பார்க்க முடிகிறது. சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. தலையைப் பின்னும் போது முடியினை மூன்றாகப் பிரித்த பின் பின்னல் பின்னப்படுகிறது. ஆனால் பின்னிய பின்னலில் முடியின் இரண்டு பாகங்கள் மட்டுமே நம் கண்களுக்குப் புலப்படுகிறது. மூன்றாவது பாகம் பின்னிப் பிணைந்து நம் கண்ணுக்கு நேரடியாகப் புலப்படுவதில்லை. அது போலவே சரஸ்வதி நதியும் கங்கை, யமுனையுடன் பின்னிப் பிணைந்து கண்ணுக்குத் தெரிவதில்லை என்று சொல்கிறார்கள்.
பிரயாகையில் கணவர்களும் முடி தானம் செய்ய வேண்டுமாம். 'ப்ரயாகே ப்ரதமே முண்டனம்'. பிரயாகையில் முண்டம், காசியில் தண்டம், கயையில் பிண்டம் என்கிறார்கள். காசி, கயைக்கான விளக்கங்களை வரும் பகுதிகளில் காணலாம். பிரயாகையில் ஆண்கள் மொட்டை போடுவது உசிதம். அது முடியவில்லை என்றால் சவரம் செய்து கொண்டு கொஞ்சமாக முடி இறக்கிக் கொள்வது நல்லதாம். அங்கு சவரம் செய்து விட ஆட்கள் இருக்கிறார்கள். எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த ஒருவர் வந்து ஐந்து ஆண்களுக்கும் கொஞ்சமாக முடி இறக்கி, சவரம் செய்வித்தார்.
நாங்கள் முறத்தில் கொண்டு சென்றிருந்த வெற்றிலை, பாக்கு, பழம், பூ, முதலியவற்றை திரிவேணி சங்கமத்தில் வேண்டிக் கொண்டு நதிக்கு அர்ப்பணித்தோம். பின் நான்கு சகோதரர்களும் அவர்கள் மனைவிகளும் ஒரு சேர 'ஓம் நமசிவாய' என்று பன்னிரண்டு முறை உச்சரித்த படி இராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த சேது மாதவராய் பூஜித்த மண்ணை திரிவேணி சங்கமத்தில் கரைத்தோம். அதே போல் சுந்தர் மாமாவும் விஜயா அக்காவும் செய்தார்கள். அங்கே நடு நதியிலிருந்து கேனில் நீர் நிரப்பிக் கொண்டோம். அதன் பின் நாங்கள் ஜோடி ஜோடியாக கையைப் பிடித்துக் கொண்டு மூன்று முறை முங்கி எழுந்து எல்லா பாபங்களும் தீரவும், குடும்ப நபர்களை மனதில் நினைத்து அவர்களுது க்ஷேமத்திற்காகவும் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவும் வேண்டிக் கொண்டோம்.
வேணி தானம் மிகவும் திருப்தியாக மன நிறைவுடன் இனிதே முடித்து விட்டு ஈரத்துணியுடன் அங்கிருந்து கிளம்பி சிவ மடத்திற்கு வந்தோம். அடிக்கும் வெய்யிலில் இந்த ஈரம் ஒரு பொருட்டே இல்லை.
சிவ மடத்திற்கு வந்ததும் ஹிரண்ய சிரார்தம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்கள். இதற்கு பிராமணாள் கிடையாது. 17 பிண்டங்கள் பிடித்து பிண்டப் பிரதானம் செய்து 'தத்தம்' கொடுத்த பின் வாத்தியாருக்கு சம்பாவனை செய்து முடித்ததும் தர்ப்பணம் செய்தார்கள் ஆண்கள். பிண்டத்தை கங்கையில் கரைக்க வேண்டும். அதை வாத்தியாரே கரைக்க ஏற்பாடு செய்வதாகக் கூற அதற்கான பணத்தை மட்டும் கொடுத்துவிட்டோம்.
அதன் பின் எங்கள் ஈரப் புடவைகளையும் வேஷ்டிகளையும் மாற்றிக் கொண்டு அந்த புடவைகளையும் வேஷ்டிகளையும் தானமாகக் கொடுக்கும்படி அந்த சிவ மடத்திலேயே விட்டு வந்தோம். அலகாபாத் தில் நீராடிய பின் அந்த ஈர உடையை அங்கேயே விட்டு விட்டு வர வேண்டும் என்பது சிலரது நம்பிக்கை. அதற்கான காரணங்கள் எதுவும் இல்லை என்றாலும் முன்பெல்லாம் இல்லாதவர்களுக்கு அதைக் கொடுத்தால் எடுத்துச் செல்வார்கள். ஆனால் இப்பொழுது யாரும் வாங்கிக் கொள்வதில்லை என்றார் கணேச வாத்தியார். இருந்தாலும் நாங்கள் எங்கள் உடைகளை தானம் செய்யும் விதமாக அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டோம்.
பின் அவர்கள் சமைத்து வைத்திருந்த சிரார்த்த சாப்பாடு சாப்பிட்டோம். பிரயாக்ராஜ் என்னும் அலகாபாத்தில் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை முறைப்படி முடித்துவிட்டு அங்கிருந்து மதியம் 2.30 மணிக்கு வாரணாசி நோக்கிக் கிளம்பினோம். வழியில் 'லஸ்ஸி'யும் டீ கேட்டவர்களுக்கு டீயும் வாங்கிக் கொடுத்தோம். நடுவில் என் கணவர் ஜெயராமன் லிச்சி பழம் வாங்கி வர தாகத்திற்கு இதமாய் இனித்தது அது. 5 மணிக்கு வாராணாசி வந்து சேர்ந்தோம்.
'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஆஸ்ரமம்' ஹோட்டலில் நாங்கள் கேட்டுக் கொண்டபடி வேறு ரூம் மாற்றிக் கொடுத்தார்கள் . அது பழைய ரூமை விட பரவாயில்லை. ஆனால் ஏசி சுமராகத் தான் வேலை செய்தது. இதுவும் ஆண்கள் ரூம் அளவுக்கு இல்லை என்று புலம்பினாலும் அந்த ரூமுக்கு மாறி விட்டோம்.
வாரணாசி என்னும் காசி:
6 மணிக்கு ஷ்யாம் வந்து எங்களை கங்கா ஆர்த்தி பார்க்க அழைத்துச் சென்றார். எங்கள் எல்லாருக்கும் கங்கா ஆர்த்தியை நேரில் பார்க்க வேண்டும் என்பது ஆசை. முக்கியமாக சாரதா விற்கு அது மிகப்பெரிய கனவு. தினமும் ஆன்லைனில் அந்த ஆர்த்தியைப் பார்ப்பது அவளது வழக்கம். கங்கைக் கரையை அடைந்ததுமே மனம் குதூகலித்தது.
கங்கை 'சிவாலயா காட்' என்னுமிடத்திலிருந்து 'போட்' டில் புறப்பட்ட நாங்கள் கங்கையைச் சுற்றி இருக்கும் 66 காட் களையும் அந்த போட்டில் அமர்ந்தபடி வலம் வந்தோம்.
ஹனுமான் காட், ஹரிசந்திரா காட், துளசி காட், மணி கர்நிகா காட், அஸ்ஸி காட் இப்படி பல காட் களை பார்த்து கடந்த பின் தச அஸ்வமேதா காட் வந்தடைந்தோம்.
கங்கா ஆரத்தி பார்க்க நிறைய பேர் வந்திருந்தார்கள். செம கூட்டம். போட்டில் அமர்ந்த படி ஆர்த்தியை ரசித்தோம். மணியோ சாயங்காலம் ஏழு மணி. இருப்பதோ கங்கை நதி சூழல். அப்படியும் அடித்ததென்னவோ வெப்பக்காற்று தான். தாகம் தாங்கவில்லை. நாங்கள் கேட்டுக் கொண்டதால் போட் ஓட்டுநர் ஒவ்வொரு 'போட்'டாக தாண்டிச் சென்று கரையிலிருந்து ஐஸ் வாட்டர் பாட்டில்கள் வாங்கி வந்தார். நன்றியுடன் பருகிய உடன் தான் உயிர் வந்தது. அடாது அனல் அடித்தாலும் விடாது குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்வது என்று நாங்களும் அசராமல் எல்லாவற்றையும் உற்சகமாய் செய்து வந்தோம்.

நாங்களும் விளக்கு வாங்கி அதை நீரில் இட்டு அது மிதந்து வரும் அழகை ரசித்தோம். ஆர்த்தி முடிந்து நாங்கள் நேராக 'கேதார் வாத்தியார்' வீட்டிற்குச் சென்றோம். அவர்களை விமானத்திலேயே சந்தித்திருந்ததால் மிகவும் பரிச்சியமாக இருந்தது. அவர்கள் வீட்டில் எங்கும் 'மஹா பெரியவா' நிறைந்திருக்கிறார். அவரது பாதத்தை பூஜை அறையில் வைத்திருக்கிறார்கள். அங்கு சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு அருகில் இருக்கும் அவரது மகன் கௌசிக் வீட்டிற்கு சாப்பிடச் செல்வதாக ஏற்பாடு. நான், சீதாராமன் மற்றும் விஜயா அக்கா ஹோட்டல் ரூமிற்கு வந்து விட்டோம். மற்றவர்கள் கௌஷிக் அவர்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டு எங்களுக்கும் தோசை எடுத்துக் கொண்டு வந்தார்கள். சாப்பிட்டு சிறுது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தோம்.
இரவு 9 மணிக்கு அனந்தன் அண்ணாவும் ரகுவும் காசி விஸ்வநாதரை தரிசிக்க செல்வதாகச் சொல்ல நாங்களும் வருகிறோம் என்று நான், கௌரி, சாரதாவும் கிளம்பிவிட்டோம். வாரணாசியில் சுற்றுப்புற சூழலுக்கு ஊறு விளைவிக்காத வகையில் எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் இருக்கின்றன. அதில் 4 பேர்கள் தாராளமாகச் செல்லலாம். 5 வது ஆள் ஓட்டுநர் பக்கத்தில் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டு பயணிக்க முடியும். நாங்கள் ஐந்து பேரும் ஒரு ஆட்டோ எடுத்துக் கொண்டோம். ஆட்டோ கோவில் வரை செல்வதில்லை. அங்கிருந்து நடந்து நாங்கள் கோவிலை அடைந்தோம். கோவிலுக்குள் மொபைல் ஃபோன், எலக்ட்ரானிக் பொருட்கள் அனுமதி இல்லை. ஆண்களுக்கு ஒரு க்யூ. பெண்களுக்கு ஒரு க்யூ. கோவிலுள் நுழையுமுன் செக்யூரிட்டி செக் செய்கிறார்கள். சாரதா உள்ளே சென்ற பின் நான் செல்ல எங்கள் 'ஸ்மார்ட் வாட்ச்' சைப் பார்த்து என்னையும் கௌரியையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
'வாட்ச்'சை வெளியில் லாக்கரில் வைத்துவிட்டு வரும்படி கூறிவிட்டனர். உள்ளே சென்ற மூவரும் எங்களைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. எங்களிடம் பணமும் இல்லை. ஆனால் வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளாதா என்ன? எங்களுக்கு ஹிந்தி தெரியுமாதலால் நாங்கள் வெளியில் சென்று லாக்கர் இருக்கும் இடத்தை அறிந்து வாட்சை வைத்துவிட்டு ஸ்வாமிக்கு முந்திரி திராட்சை டப்பா வாங்கிக் கொண்டு திரும்பி வரும் போது பணம் தருவதாகக் கூறிவிட்டு வருவதற்குள், எங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார் அண்ணா. என்னாச்சு பின்னாடியே வர வேண்டியது தானே? என்று அண்ணா கேட்க, எங்களை உள்ள விடலை. ஏன் நீங்க எங்களைத் திரும்பிப் பார்க்கலை என்று நாங்கள் எதிர் கேள்வி கேடக டென்ஷன் குறைந்து சிரித்தபடி நாங்கள் தரிசனத்திற்குச் சென்றோம். இரவு 10 மணிக்கும் அசாத்திய கும்பல். சிவனுக்கு ஆர்த்தி நடந்து கொண்டிருந்ததை அங்கிருந்த டீவி மூலம் பார்க்க முடிந்தது. க்யூவில் சென்ற போதும் காசி விஸ்வநாதரை தூரத்திலிருந்து தான் தரிசிக்க முடிந்தது. பூ அலங்காரங்களில் இருந்ததால் சிவலிங்கத்தை எங்களால் சரியாகப் பார்க்கமுடியவில்லை. ஆனால் ஆர்த்தியை கண்ணில் ஒற்றிக்கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. கோவிலின் அழகை ரசித்தபடி அங்கிருந்து கிளம்பி எங்களின் 'வாட்ச்'சைப் பெற்றுக் கொண்டு பணம் கொடுத்துவிட்டு தெய்வீகமான காசி அன்னபூரணியைப் பார்க்கச் சென்றோம். அன்னபூரணி கொள்ளை அழகு. அவளது அழகை கண்களிலும் கருணையை மனதினிலும் நிரப்பிக் கொண்டு கேட் 2 வில் உள்ள விசாலாட்சி அம்மனை தரிசிக்கச் சென்றோம்.
தெருவில் ஆட்டோ, நாய், ஸ்கூட்டர், நடப்பவர்கள், அங்கேயே ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு செல்பவர்கள், எங்கும் குப்பை கூளம் என்று நிறைந்திருக்க தெருவில் கால் வைக்கவே இடமில்லை. அதிலும் 5 பேர் தட்டுத்தடுமாறி அம்மனை தரிசித்தோம். அம்மனின் கருணை உருவில் அத்தனை தூரம் நடந்ததே தெரியவில்லை. நாங்கள் எலெக்ட்ரிக் ஆட்டோவில் ரூமுக்கு வரும் போது மணி 11.30 ஆகி விட்டது. நிம்மதியாக உறங்கிப்போனோம்.
வாரணாசியில் நாங்கள் செய்த பித்ரு காரியங்களின் விவரங்கள் பகுதி 3 ல் காணலாம்.
பிரயாக்ராஜ் என்னும் அலகாபாத் பயணத்திற்கு ஆன செலவுகள்:
|
வரிசை
எண்
|
விளக்கங்கள்
|
செலவுகள்
|
|
1
|
மகாதானபுரத்திலிருந்து திருச்சிக்கு வேன் செலவு (ஒரு பேட்சுக்கு
2000 வீதம் இரண்டு ட்ரிப் களுக்கு)
|
4000.00
|
|
2
|
28.5.2024
வாரணாசி ஏர்போர்ட்டிலிருந்து பிக் அப் செய்து மீண்டும் 2.6.2024 வாரணாசி ஏர்போர்ட்டில் விடும் வரை பனிரெண்டு பேர்கள் சௌகர்யமாக அமரும் வண்ணம் அர்பானியா (Urbania) வேனுக்கு
|
35000.00
|
|
3
|
ஸ்நாக்ஸ்
|
100.00
|
|
4
|
வேணிதானம் ஒரு சுமங்கலிக்கு 100 வீதம்
2 சுமங்கலிகளுக்கு 5 பேர் கொடுத்தது
|
1000.00
|
|
5
|
வேணிதானத்திற்கு முறம்,
ரவிக்கைத் துணி இத்யாதி
|
1000.00
|
|
6
|
போட், பண்டா,
சவரம்
|
3200.00
|
|
7
|
டிப்ஸ்
|
200.00
|
|
8
|
வாட்டர் பாட்டில்
6 க்கு ஒன்று
20 ரூ வீதம்
|
120.00
|
|
9
|
ஹிரண்ய ஸ்ரார்தம் வாத்தியார் தட்சணை
5 பேருக்கு 500ரூ வீதம்
|
2500.00
|
|
10
|
பிண்டம் கரைக்க
|
250.00
|
|
11
|
சாப்பாடு 2530 + டிப்ஸ்
|
3000.00
|
|
12
|
லஸ்ஸி டீ இத்யாதி
|
420.00
|
|
13
|
லிச்சி பழம்
|
140.00
|
|
14
|
டிரைவர் உணவு
|
200.00
|
|
15
|
வாழைப்பழம்
|
50.00
|
|
16
|
கங்கா ஆர்த்தி விளக்கு ரூ20 வீதம் 5 விளக்குகள்
|
100.00
|
|
17
|
கங்கா ஆர்த்தி பார்க்க போட் செலவு பேருக்கு 250ரூ வீதம் 10 பேருக்கு
|
2500.00
|
|
|
மொத்தம்
|
53780.00
|
அலகாபாத் என் பார்வையில்:
நாங்கள் அலகாபாத்தில் தங்கவில்லை.
காசியில் 28.5.2024 லிலிருந்து 2.6.2024 வரை தங்குவதற்கு ரூம் புக் பண்ணிக்கொண்டோம். எங்கள் ஊரிலிருந்து செல்லும் போதே நாங்கள் கெட்டில், இண்டக்ஷன் ஸ்டௌ, பில்டர், இரண்டு இண்டக்ஷன் பாத்திரங்கள், கஞ்சி மாவு, காஃபி பௌடர், டீ பேக்கெட்ஸ், இன்ஸ்டன்ட் காஃபி பௌடர் எல்லாம் எடுத்துக் கொண்டு சென்றிருந்தோம். காசி ஹோட்டலில் கெட்டில் வைத்திருக்கவில்லை. நாங்கள் எடுத்துச் சென்றது மிகவும் உபயோகமாக இருந்தது.
29.5.2024 அன்று காலை காசியிலிருந்து அலகாபாத் சென்று பித்ரு காரியங்களை நல்லபடி முடித்துவிட்டு சாயங்காலம் 5 மணிக்கு மீண்டும் காசி வந்து விட்டோம்.
மே மாத வெய்யில் கொளுத்தி எடுத்துவிட்டது அலகாபாத்தில். 45 லிருந்து 48 டிகிரி. அந்த ஊர் சாப்பாடு, வெய்யில், தண்ணீர் எல்லாம் நமது உடம்புக்கு ஒத்துக் கொள்வது கடினம். பலருக்கு வாந்தி, 'டீ ஹைட்ரேஷன்' (Dehydration) ஆகும் வாய்ப்புகள் மிக அதிகம். எங்களிலும் பலருக்கு இந்த பிரச்சனை முதல் நாளிலேயே இருந்தது.
திரிவேணி சங்கமத்தை பார்க்க குளிர் காலம் அதாவது அக்டோபரிலிருந்து மார்ச் வரை உள்ள மாதங்கள் தான் உகந்தது. தண்ணீரும் மிகுந்து இருக்கும்.
கையில் குளுகோஸ், எலக்ட்ரால், புளிப்பு மிட்டாய்கள் எடுத்துச் செல்வது நல்லது. தாகத்தைக் கட்டுப்படுத்தி 'டீ ஹைட்ரேஷன்' ஆகாமல் காக்க உதவும்.
தண்ணீர் பாட்டிலில்கள் வாங்கி வைத்துக் கொண்டு அவ்வப்போது குடித்துக் கொண்டே இருப்பது உசிதம்.
லஸ்ஸி மிகவும் பிரசித்தம். மிகவும் ருசியாக இருக்கிறது. ஆனால் அந்த ஊர் பால், தயிர் மிக மிக திக்காக இருப்பதால் பலருக்கு ஈசியாக டைஜஸ்ட் ஆவதில்லை.
அலகாபாத்தில் நாங்கள் தங்கி இருந்த சிவ மடம் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம். இங்கிருக்கும் கணேச மாமாவின் தாத்தா நடேச சாஸ்திரிகள் அரசியலில் இருந்திருக்கிறார்.
முன்னாள் குடியரசுத்தலைவர் வி.வி. கிரி அவர்கள் இந்த மடத்தில் தங்கியுள்ளார். அந்த புகைப் படத்தை சிவ மடத்தில் காண முடிகிறது.
1900 ல் பாரதியார் இங்கு தங்கியதாக வலைதளத்தின் மூலம் தெரிய வருகிறது.
திரிவேணி சங்கமத்தில் நீர் அதிகமில்லா வெய்யில் காலத்திலும் நீரின் சுழற்சி அதிகமாக இருப்பதை உணர முடிகிறது.
திரிவேணி சங்கமத்தைப் பார்க்கும் போது ஒருவித தெய்வீகத் தன்மையுடன் இருந்தாலும், அங்குள்ள தண்ணீரின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்று தோன்றியது. தண்ணீரில் துணிகளை விடுவதும், ப்ளாஸ்டிக் போன்ற குப்பைகளைப் போடுவதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இப்பொழுது கொஞ்சம் விழிப்புணர்வு தோன்றி இருக்கிறது என்றாலும் இந்த இடங்களின் புனிதத் தன்மையைக் காப்பாற்றி தூய்மையுடன் நம் வருங்கால சந்ததிகளிடம் ஒப்படைக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
பயணங்கள் தொடரும்.
மாதங்கி ஜெயராமன்
பெங்களூரு.
22.06.2024
மற்ற
பகுதிகளுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 1 – இராமேஸ்வரம்
Very detailed description of your trip. Enjoyed reading it. Will be useful for those planning a trip
ReplyDeleteThank you so much mami. Your comment means a lot to me.
DeleteWonderful writing. You have taken us on a kasi trip through your writing. Thank you for sharing all the details.
ReplyDeleteThank you so much Viji.
ReplyDeleteSo well written! Really enjoyed the read!
ReplyDelete