Monday, July 1, 2024

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 3 - வாரணாசி என்னும் காசி

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 3 - வாரணாசி என்னும் காசி:

வாரணாசி என்னும் காசி:



குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 2 ல் அலகாபாத் பயணம் பற்றி எழுதியுள்ளேன். அதன் அடுத்த பாகம்  தான் இந்தப் பகுதி. இதில் நாங்கள் வாரணாசி என்னும் காசியில் செய்த பித்ரு காரியங்கள் மற்றும் கோவில்கள் பற்றி எழுதியுள்ளேன். 

காசியில் 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஆஸ்ரமம்'  என்னும் ஹோட்டலில் 29.5.2024 அன்று ரூம் மாறிய பிறகு நாங்கள் நிம்மதியாகத் தூங்கினோம். மன்னியும் தான். 30.5.2024 அன்று காலை 5 மணிக்கு குளித்து ரெடியாகி எங்களுடன் வந்த கேதார் வாத்தியார் அகத்திற்கு செல்வதாக ஏற்பாடு.  நாங்கள் பெண்கள் எல்லாரும் 3 மணிக்கே முழித்துக் கொண்டு விட்டோம். பல் தேய்க்கச் சென்ற மன்னி என்னடி ஒரு சொட்டு தண்ணி வரலை? என்றார்.  பார்த்தால் குழாய்களில் வெறும் காத்து தாங்க வருது. என்ன செய்வதேன்றே தெரியவில்லை.  இது என்னடா காசிக்கு வந்த சோதனை? புது ரூம்.  புது பிரச்சனை.

வெளியில் சென்று பார்த்தால் யாரும் முழித்திருக்கவில்லை. ரிசப்ஷனுக்கு ஃபோன் செய்து கேட்க என்ன பிரச்சனைன்னு தெரியலை மேடம் பார்த்துகிட்டு இருக்கோம். அரைமணி ஆகும் என்று சொன்னார்கள். அப்பாடா இது எங்கள் ரூம் பிராப்ளம் இல்லை. ஹோட்டல் முழுவதுமே தான் பிரச்சனை. அப்ப இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று முடிவு செய்தோம். 

4 மணிக்கு மீண்டும் ஃபோன் செய்ய இன்னும் சரி ஆகலை மேடம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்ற பதில் வந்தது ரிசப்ஷனிலிருந்து. எவ்வளவு நேரம் வெயிட் செய்வது என்று புரியவில்லை. அதற்குள் ரகு வந்து விசாரிக்க ஹோட்டல் முழுவதுமே ஏதோ ப்ராப்ளமாம் எப்பொழுது தண்ணீர் வரும் என்றே தெரியலையாம் என்றோம் அப்பொழுது மணி 4.30. பல் கூட யாரும் தேய்க்கவில்லை.  5 மணிக்குள் எல்லாரும் கிளம்ப வாய்ப்பே இல்லை.

ஆபிஸுக்கு லேட்டாகச் செல்ல  பர்மிஷன் கேட்கத் தயங்கித் தயங்கி மனேஜருக்கு ஃபோன் செய்வதைப் போல் ஆஸ் தேரி ஈஸ் நோ வாட்டர் இன் அவர் ஹோட்டல் ப்ளீஸ் க்ராண்ட்  ஹாஃப் அ டே பர்மிஷன்' என்று கேட்டுக் கொள்ளலாம் என்று கேதார் வாத்தியாரின் மகன் 'கௌஷிக்' அவருக்கு தயங்கித் தயங்கி  ஃபோன் செய்தோம்.  அவர் எங்காத்துலையும் தண்ணீர் வரலை. இந்த ஏரியா முழுக்கவே தண்ணீர் வரலையாம்.  நாங்களும் ஃபோன் பண்ணி விசாரிச்சிருக்கோம் அரை மணில தண்ணீர் வந்துடும்னு ஒரு மணி நேரமா சொல்லிண்டு இருக்கா. வந்தப்பறம் ரெடியாகி புறப்பட்டு வாங்கோ என்றதும் தான்  அப்பாடா  என்று நிம்மதி ஆயிற்று.  எங்கள் ரூம் மட்டுமில்லை எங்கள் ஹோட்டல் மட்டுமில்லை 'சிவாலாகாட்'  முழுவதிலுமே குழாய்களில் காத்து தாங்க வந்திருக்கு.

6 மணிக்கு மேல் தான் தண்ணீர் வந்தது. எல்லாரும் ஒவ்வோருவராய் குளித்து ரூமிலேயே டீ, காஃபி போட்டு எல்லாருக்கும் கொடுத்து விட்டு, விஜயா அக்கா கொண்டு வந்த கஞ்சி மாவில் கஞ்சி போட்டு வேண்டுமென்பவர்களுக்குக் கொடுத்து விட்டு மடிசாரு பஞ்சகசத்துடன்  கிளம்ப 7.30 மணி ஆகிவிட்டது. 

நாங்கள் நேரே கௌஷிக் அவர்களின் வீட்டிற்குச் சென்றோம் .  வீட்டு வாசலில் குஜராத் கிர் பசு மாடுகள் கட்டப்பட்டிருந்தன. நாங்கள் எல்லாருமே மாடு கன்றுகள் சூழ கிராமத்தில் வளர்ந்தவர்கள். அந்த சூழலில் வீட்டுக்குள் நுழைவதே தெய்வீகமாக இருந்தது எங்களுக்கு.  

அங்கு சென்றதும் சங்கல்ப பூஜை செய்து வைத்தார் கேதார் வாத்தியார். தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த பாபங்கள் நீங்கவும், குடும்ப க்ஷேமத்திற்காகவும் வேண்டிக்கொண்டு கங்கையில் நீராட போட்டில் சென்றோம்.  நாங்கள் சென்றது 'மணி கர்நிகா' காட் என்னும் கங்கை துறைக்கு.  ஷ்யாம் எங்களுடன் வந்திருந்தார்.




'மணி கர்நிகா'  துறையில் இறங்கி 'சக்கரப் புஷ்கர்ணி' என்னும் புனித சக்கரத் தீர்த்ததிற்கு நீராட அழைத்துச் சென்றார் ஷ்யாம்.  அந்த தீர்த்தம் தாகத்தைத் தீர்ப்பதற்காக விஷ்ணு தன் அம்பால் தோற்றுவித்த புண்ணிய தீர்த்தமாகும்.  அந்த நீர் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. கொளுத்தும் வெய்யில் காலத்தில் நீர்நிலைகளெல்லாம் வெந்நீராய் தகிக்க இந்த புஷ்கரிணியோ சில்லென்று சிலிர்க்க வைத்தது.   அங்கு எங்களுக்கு பூஜை செய்வித்தவர் சொன்ன ஸ்லோகத்தைச் சொன்னபடி தம்பதிகள் கைகளைப் பிடித்துக் கொண்டு முங்கி எழுந்தோம். 
அங்கிருந்து மணி கர்நிகா காட்  சென்று அங்கு கங்கையில்  தம்பதிகள்  கை கோர்த்துக் கொண்டு மனதில் பிரார்த்தனை செய்து கொண்டு மூன்று முறை முங்கி எழுந்தோம்.   புண்ணிய தீர்த்தங்களில் சிரத்தையுடனும் நம்பிக்கையுடனும் நீராடினால் பாப விமோசனம் கிடைக்கும். கங்கையில் நீராடினால் கடின பாபமும் கரைந்தோடும் என்பது ஐதீகம்.  ஸ்ரார்த்தம் செய்வதற்கு கங்கையிலிருந்து நீர் எடுத்துக் கொண்டு ரூமிற்கு சென்று புடவை, வேஷ்டி மாற்றிக் கொண்டு ஈர உடைகளை மாடியில் உலர்த்திவிட்டு  கௌசிக் அவர்கள் மனைக்குச் சென்றோம்.

தந்தையின் வழியில் மூன்று தலைமுறை, தாய் வழியில் மூன்று தலைமுறை பெயர்களைச் சொல்லி  கிரமமாக கேதார் வாத்தியார்  செய்து வைக்க காசியில் நாங்கள் ஸ்ரார்த்தம் செய்தோம். விஜயா அக்காவுடன்  சுந்தர் மாமா  ஹோமம் வளர்த்து ஸ்ரார்த்தம் செய்தார். நான்கு சகோதரர்களும் அவரவர் மனைவிகளுடன் தனித்தனியாக ஹோமம் வளர்த்து  ஸ்ரார்த்தம் செய்தோம்.    

சுந்தர் மாமா விஜயா அக்கா தம்பதிகள் ஆறு பிராமணாளுக்கும்,  நான்கு சகோதரர்களும்  ஒரு தம்பதிக்கு இரண்டு பிராமணாள் விகிதம் 8 பிராமணாளுக்கும்  மரியாதை செய்து உணவளிக்குமாறு ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்னம், கறித்தான் மட்டும் 5 ஜோடிகளுக்கும் தனித்தனியாகவும் மற்ற உணவுகள் ஒன்றாகவும் வைத்திருந்தார்கள். அதன் படி 14 பிராமணர்களுக்கு உணவு பரிமாறினோம்.



அந்த ஊர் பிராமணர்கள் சாதம், சாம்பார் என்ற தென் இந்திய உணவுகளை அவ்வளவாக விரும்புவதில்லை. எனவே ஸ்ரார்த்த சமையலில் பூரி கண்டிப்பாக இருக்கிறது. பூரி, பக்ஷணம், திதிப்பு பச்சடி இவற்றைத் தான் அவர்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். நமக்கும் அவர்கள் சமையல் அவ்வளவாக ஒத்துக் கொள்ளவில்லை.

பிராமணாள் சாப்பிட்டதும் அவர்களுக்கு பாதம் அலம்பி நமஸ்கரித்து மரியாதை செய்து தட்சணை கொடுத்து திருப்தியாக காசி ஸ்ரார்த்தத்தை நிறைவு செய்தோம். நாங்கள் எல்லாரும் சாப்பிட்டு முடித்து ஹோட்டலுக்கு வரும் போதே மணி 4 ஆகி விட்டது.  இரவு உணவிற்காக அங்கிருந்து ஸ்ரார்த்த பட்சணங்கள் வடை, அப்பம் மற்றும் பூரி எடுத்துக் கொண்டு வந்தோம்.

வரும் போதே பால் வாங்கிக் கொண்டு வந்ததால்  காஃபி, டீ, ப்ளாக் டீ என்று கேட்பவர்களுக்குத் தேவையானதைப் போட்டுக் கொடுத்தபின் மாடியில் உலர்த்திய துணிகளை எடுத்து வந்து மடித்து வைத்தோம். 

எங்கள் எல்லாரையும் காசி விஸ்வநாதரையும் இன்னும் சில கோவில்களையும் தரிசிக்க கூட்டிச் செல்ல 5 மணிக்கெல்லாம் ஷ்யாம் வந்துவிட்டார்.  ஸ்மார்ட் ஃபோன், வாட்ச் எதுவும் கோவில்களில் அனுமதி இல்லை. ரகு  மட்டும்  பணப்பை மற்றும் போன் எடுத்து வருவது என்றும்   ஃபோனை   லாக்கரில் வைத்து விடுவது, மற்றவர்கள் ஹேண்ட் பேக், பர்ஸ், மொபைல் இவை எதுவும் எவரும் எடுத்து வர வேண்டாம் என்று முடிவு செய்தோம். 

காசி விஸ்வநாதர் ஆலையம்;

முதலில் காசி விஸ்வநாதரை தரிசிக்கச் சென்றோம். முதல் நாள் சென்றபோது  ஜோதிர் லிங்கத்தை முழுமையாக தரிசிக்க முடியவில்லை.  சிலர் பணம் கட்டி சிவனுக்கு அருகிலேயே சென்று அபிஷேகம் செய்ததை டீவியில் பார்த்தோம். அதற்கு பணம் கட்டி மிகப் பேரிய க்யூவில் காத்திருக்க வேண்டும். நாங்கள் அபிஷேகம் செய்யவில்லை. அதனால்    சிறிது அருகில் சென்று விஸ்வநாதரை தரிசிக்கும் விதமாக இருந்த க்யூவுக்கு பணம் கட்டினோம்.  காசி விஸ்வநாதரை கண் குளிர தரிசித்து வேண்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

இந்த காசி விஸ்வநாதர் கோவிலைப் புணர் நிர்மாணம் செய்தவர் ராணி 'அகல்யா பாய் ஹோல்கர். ஔரங்கசீப் காசி விஸ்வநாதர் கோவிலை முற்றிலுமாக அழித்து லிங்கத்தை கிணற்றில் வீசியதைப் பார்த்த ராணி 'அகல்யா பாய் ஹோல்கர்' அந்த சிவ லிங்கத்தினை எடுத்து  பிரதிஷ்டை செய்ததாகக்  கூறுகிறது வரலாறு.  இந்தியாவிலுள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் காசி விஸ்வநாதருடன் சேர்த்து  8 ஜோதிர்லிங்கக் கோவில்களை புணர் நிமாணம் செய்த பெருமை இவரையே சாரும்,  அவை குஜராத் சோமநாதர், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர், உஜ்ஜயினி ஓம்காரேஷ்வரர், கேதர்நாத் கேதாரேஷ்வரர்,  மஹாராஷ்ட்ரா பீம் சங்கர், எல்லோரா அருகிலுள்ள  கிருஷ்ணேஷ்வர் கோவில் மற்றும் திரியம்புகேஷ்வரர் கோவில்களாகும். 'காசி விஸ்வநாத தாம்' என்னும் இடத்தில் இவருடைய சிலையை அமைத்து கௌரவித்துள்ளது மத்திய அரசு. 


காசி விஸ்வநாத தாம் அதாவது காசி விஸ்வநாத காரிடார்:

கே.வி.தாம் அல்லது கே.வி.காரிடார் என்று அழைக்கப்படும் இந்த காரிடார்  மத்திய அரசால் 2021 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. கங்கையின் 'மணி கர்நிகா' துறையிலிருந்து  நேரடியாக காசி விஸ்வநாதரை தரிசிக்கும் விதமாக காரிடார் அமைக்கப்பட்டுள்ளது.  கங்கையில் குளித்துவிட்டு இந்தக் காரிடார் வழியாக  விஸ்வநாதரைக் கும்பிடச் செல்ல முடியும்.  வாரணாசியின் பழமையும் தொன்மையையும் கெடாமல் புதுமையைப் புகுத்தி கட்டப்பட்டுள்ள கே.வி.தாம் காரிடாரில் ம்யூசியம்,   சாப்பிடும் இடங்கள், புத்தகக் கடைகள், தூய்மையான ரெஸ்ட் ரூம்கள் என்று ஏதோ ஏர்போர்ட்டில் இருப்பது போல் இருக்கிறது. 

காசி அன்னபூரணி:

காசி அன்னபூரணியின் முகம் பொலிவாய் மின்னுகிறது. கண்ணை எடுக்கவே முடிவதில்லை. அன்னபூரணி கோவிலில் இருக்கும் சிவலிங்கத்திற்கு நாமே அபிஷேகம் செய்யமுடிகிறது. சிவபெருமான் அன்னபூரணியைப் பார்க்க தினமும் இங்கு வருவதாக ஐதீகம்.  நாங்கள் தம்பதிகளாக அன்னபூரணியை நமஸ்கரித்து பின் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்துவிட்டு வந்தோம். 

காசி விசாலாட்சி:

அங்கிருந்து காசி விசாலாட்சியை தரிசிக்கச் சென்றோம்.  காசி விசாலாட்சி கோவிலில் தமிழில் நிறைய எழுதி இருக்கிறார்கள். பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. உண்மையில் காசி முழுவதுமே பல கடைகளில் பெயர்கள் மற்றும் விவரங்களை தமிழில் எழுதி இருப்பதைப் பார்க்கப் பெருமையாக இருக்கிறது.


விசாலாட்சி அம்மன் கண்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. நகரத்தார் இன்றும் அந்த கோவிலை பரமாரித்துவருவதாக கல் வெட்டுகள் தெரிவிக்கின்றன. விசாலாட்சி அம்மனை தரிசித்தபின் அடுத்த கோவிலை நோக்கி நடக்குமுன் எல்லாருக்குமே தாகமாக இருக்கவே நாங்கள் லஸ்ஸி ப்ரேக் எடுத்துக் கொண்டோம். 

கால பைரவர் கோவில்:

கால பைரவர் கோவில் விசாலாட்சி அம்மன் கோவிலிலிருந்து தொலைவில் இருப்பதால் 3 எலெக்ட்ரிக் ரிக்ஷாக்களில் செல்வது என்று முடிவு செய்தோம்.  ரிக்ஷா ஏற்பாடு செய்தது ஷ்யாம் தான். முதல் இரண்டு ரிக்ஷாக்கள் முறையாய் சென்று விட இரண்டு பேர் இருந்த மூன்றாவது ரிக்ஷா தடம் மாறி வரவே இல்லை.  கைட் ஷ்யாம் எங்களை காத்திருக்கவோ யோசிக்கவோ விடவில்லை. முன்னாடி போய் விட்டார்கள்  என்று கூறிவிட்டதால் நாங்கள் கால் பைரவரை நோக்கிச் சென்றோம். 


கால பைரவர் எல்லை சாமி போல் ஊரைக் காப்பாற்றுபவர். எல்லா முக்கிய புண்ணிய ஸ்தலங்களிலும்  காவல் தெய்வமாகக் கால பைரவர் காட்சி அளிக்கிறார்.   கால பைரவரின் பிரஹ்ம ஹத்தி பாபம் விலகிய இடம்  இந்த வாரணாசி என்பதனால், விஸ்வநாதர் கால பைரவரை காசியிலேயே இருந்து அவரை தரிசிக்க வரும்  பக்தர்களின் பாபங்களைப் போக்கும்படி கூறினார் என்கிறது சரித்திரம். 

கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. திரை போடுமுன் நாங்கள் சென்று விட்டோம்.  ஆனால் அங்கு இருக்கும் ஒருவர் எங்களை பார்க்கவே விடாததோடு கொஞ்சம் நயமின்றி நடந்து கொண்டார். இந்த சமயத்தில் ஷ்யாம் எங்களுக்காக பேசுவார் என்று எதிர் பார்த்தோம்.  ஆனால் அவர் எதுவும் செய்யவில்லை. பிறகு நாங்களே அந்தப் பையனிடம் நயமாகப் பேசி கூட்டத்திலும் ஏகாந்தமாக கால பைரவரை வணங்கி முடிக்கவும் அவர்கள் திரை போடவும் சரியாக இருந்தது. 

நாங்கள் வெளியில் வரும் வரை மூன்றாவது ரிக்ஷாவில் வர வேண்டிய என் கணவர் ஜெயராமனும், அவரது தம்பி சீதாராமனும் வரவில்லை. அவர்களிடம் பர்ஸ், மொபைல் எதுவும் இல்லை என்பது நினைவுக்கு வர சாரதாவின் நச்சரிப்பில் எங்களுடன் வந்த ஷ்யாம் வேண்டா வெறுப்பாக ரிக்ஷா நிற்கும் இடத்திற்குப் போனார். 

அதற்குள் அங்கே என்ன நடந்ததென்று பார்ப்போம். எங்களுக்கு முன்னால் வந்த அந்த ரிக்ஷாகாரர் ஏதோ ஒரு இடத்தில் பாதை மாறிச் செல்ல இவர்கள் கால பைரவர் கோவில் என்று புரிய வைத்து ஒரு வழியாக அங்கு வந்து சேர்ந்த போது நாங்கள் யாரும் அங்கு இல்லை. சிறிது நேரம்  காத்திருந்த பிறகு என் கணவர் தம்பியை விட்டு விட்டு கோவில் பக்கம் வந்து தேடினால் கும்பலில் எங்களைக் கண்டு பிடிக்க முடியவில்லையாம். தனித்தனியாக இருப்பதற்கு பதிலாக தம்பியுடனாவது இருப்போம் என்று திரும்பிவிட்டாராம் என் கணவர்.  அந்த ரிக்ஷா காரரிடமும்  ஃபோன் இல்லையாம்.  அதற்குள் சீதாராமன் ஒரு ஆட்டோ காரரிடம் ஃபோன் கேட்டு ஃபோன் செய்திருக்கிறார்.   கொண்டு சென்ற ஃபோனை லாக்கரிலிருந்து எடுத்த பின்னும் நாங்கள் யாரும் கவனிக்கவும் இல்லை. ஃபோனை செக் செய்யவும் இல்லை.  அவர்கள் அதே வண்டியில் ரூமுக்குப் போய்விடலாமா? என்றபோது அந்த ஆட்டோக்காரர் ரிக்ஷாவிற்கான பணத்தைக் கொடுத்ததோடு நீங்கள் கோவிலுக்குப் போய் வாருங்கள். பிறகு எனக்கு ஃபோன் மூலம் பணம் கட்டி விடுங்கள் என்று கூறினாராம். அவருக்கு நன்றி கூறி பணம் பெறு முன் ஷ்யாம் அங்கு சென்று விட்டாராம். 

ஷ்யாம்  பள்ளிக் கூட வாத்தியார் எக்ஸ்கர்ஷன் கூட்டிச் செல்லும் குழந்தைகளை விரட்டிக் கொண்டே இருப்பது போல், படுத்தியது எங்கள் யாருக்குமே பிடிக்கவில்லை. யாரையும் யாருக்காகவும் வெயிட் செய்ய விடுவதில்லை. சிறிய சந்து போல் தான் இருக்கிறது எல்லா வழிகளுமே.  முன்பே கூறியது போல் அங்கே ஸ்கூட்டர், மாடு, நாய், குப்பை கூளம் என்று எல்லாமே ஒரு சேர இருக்கிறது. கொஞ்சம் கையை அசைத்தால் கை ஸ்கூட்டர்காரனுடன் போய் விடும் போல் இருக்கும் இடத்தில் 10 பேர்  செல்லும் போது நின்று எண்ணி எல்லாரும் இருக்கிறோமா என்று பார்க்கவே விடுவதில்லை. இந்த நிகழ்வுக்குப் பிறகு நாங்கள் தெளிவாகச் சொல்லி விட்டோம். நீ எங்களுக்கு 'கைட்'.  எல்லாரையும் பார்த்துக் கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும.  நீ சொன்ன ரிக்ஷாகாரரே ரூட் மாறி எத்தனை பிரச்சனை? என்று கூறினோம்.  ஒரு வழியாக பிரிந்தவர் இணைந்ததும்  கால பைரவரை வெளியிலிருந்தே தரிசித்து விட்டு,  தண்டபாணி பைரவர் கோவிலுக்குச் சென்றோம். எல்லோரும் சேர்ந்து தான். 

தண்டபாணி பைரவர் கோவில்:

தண்டபாணி பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். முன்னோர்களுக்கு செய்வவேண்டிய சம்பிரதாயங்களை காசியில் முடித்து விட்டு தண்டபாணியை தரிசித்து வருவோருக்கு முக்தி நிச்சயம் என்பது நம்பிக்கை. போன பகுதியில் பிரயாகையில் முண்டம் (முடி எடுப்பது), காசியில் தண்டம் என்று கூறி அதற்கான விளக்கத்தை அந்தந்த பகுதிகளில் விளக்குவதாகக் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.  தண்டம் ஏந்தி நிற்கும் தண்டபாணியை தரிசிக்கும் போது அவருக்கு முன்னால் மண்டியிட்டு குனிந்து அங்கிருக்கும் மேடையில் தலை வைத்து நமஸ்கரிக்க வேண்டும். அப்போது அங்கு இருக்கும் அந்த ஊர் பண்டா தன் கையிலுள்ள தண்டத்தால் நம் முதுகில் மூன்று முறை லேசாக அடிக்கிறார்.  இதன் மூலம் நம் பாபங்கள் நீங்கி எந்த தீய சக்தியும் அண்டாமல் காசி விஸ்வநாதரின் பூரண அருள் கிடைக்கும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.  அதனால் தான் காசியில் தண்டம் என்னும் வழக்கு வந்துள்ளது.

இந்த முறை ஷ்யாம்  தலையீடு அதிகம் இல்லாததால் நாங்கள் 3 ஆட்டோக்களில்  (இதில் என் கணவருக்கும் அவரது தம்பிக்கும் உதவ முன் வந்த ஆட்டோக்காரரும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது)  தேடாமல் தொலையாமல் நேராக ரூமுக்கு வந்து சேர்ந்துவிட்டோம்.  தக்க சமயத்தில் உதவ வந்த அவருக்கு எங்கள் நன்றியுடன் சிறு பரிசும் கொடுத்துவிட்டு வந்தோம்.

ரூமுக்கு வந்ததும் கையில் கொண்டு வந்த பூரி பட்சணங்களை சாப்பிட்டோம். காசி ஸ்ரார்த்தமும் கோவில் தரிசனங்களும் திருப்த்தியாக முடிந்த சந்தோஷத்தில் நிம்மதியாக  உறங்கிப் போனோம்.

31.5.2024 காலை நிதானமாகவே எழுந்தோம். காஃபி டீ போட்டுக் கொடுத்து குடித்து குளித்து, மடிசாரு, பஞ்சகசத்துடன்  கௌஷிக் அவர்கள் மனைக்குச் சென்றோம்  அங்கு 5 தம்பதிகளுக்கும் தனித்தனியாக 5 பாத்திரங்களில் பஞ்ச கங்கா ஸ்ரார்த்தம் செய்வதற்குத் தேவையான அன்னம் வடித்து வைத்திருந்தார்கள். அதனை எடுத்துக் கொண்டு 'போட்'டில்  'பஞ்ச கங்கா காட்'  நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது.

பஞ்ச கங்கா:

பஞ்ச கங்கா என்பது ஐந்து புனித நதிகளான யமுனா, சரஸ்வதி, துட்பாபா, கிரானா மற்றும் கங்கையைக் குறிக்கிறது.  எங்களுக்கு பூஜை செய்து வைக்க கௌஷிக் அவர்களின் தம்பி சங்கர் வாத்தியார் வந்திருந்தார். இந்த பஞ்ச கங்கா காட் என்பது கங்கை நிதியில் 3 கி.மீ வரை பரவியுள்ளது. 

ஐந்து பெண்களும் போட்டில் உட்கார்ந்தபடி எங்களுடன் கொண்டு வந்திருந்த அன்னத்தில் பிண்டம் பிடிக்க ஆரம்பித்தோம்.   ஒரு 'காட்' அதாவது துறைக்கு 17 பிண்டங்கள் வீதம் 5 துறைகளில் பூஜை செய்து ஆற்றில் விட 85 பிண்டங்கள் பிடித்தோம்.  ஆண்கள் வாத்தியார் சொன்னபடி போட்டிலேயே 17 பிண்டங்களை வைத்து பூஜித்து வேண்டிக் கொண்டு பஞ்சகங்கையில் கரைத்த படி வந்தார்கள்.  இது போல் 5 துறைகளுக்கும் சென்று 85 பிண்டங்களையும் கரைத்த பின் 'மணி கர்நிகா காட்' டில் இறங்கி தம்பதி சமேதமாகக் குளித்து முங்கி எழுந்தோம்.  



எங்களுக்கு மீண்டும் 'சக்கர புஷ்கர்ணி'யின் குளிர்ந்த நீரில் நீராட ஆசையாக  இருந்தது. ஆனால் அங்கு செல்லவில்லை. அடுத்ததாக 'அஸ்ஸி காட்' டில் முங்கி குளித்து சங்கர் வாத்தியார் கூறியபடி பிரம்ம யக்ஞம் செய்து தர்ப்பணம் பித்ருகாரியங்களை முடித்த பின் நதிக்கு பூத்தூவி கங்கா பூஜா செய்து பூஜித்தோம்.  பஞ்ச கங்கா ஸ்ரார்த்தம் திருப்தியாக முடித்ததும் போட்'டில் ரூமிற்கு சென்றோம். 

முதல் நாள் போலவே ரூமில் புடவை, வேஷ்டி மாற்றிக் கொண்டு ஈர உடைகளை மாடியில் உலர்த்திவிட்டு, மதிய உணவு சாப்பிட  கௌசிக் அவர்கள் மனைக்குச் சென்றோம்.

கௌஷிக் வீட்டிலிருந்து நாங்கள் தங்கி இருந்த 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஆஷ்ரம்'  ஹோட்டல் நடக்கும் தூரம் தான்.  வழியில் ஒரு தமிழ் செட்டியார் கடை உண்டு. சாப்பிட்டு விட்டு திரும்பும் போது செட்டியார் கடையில் பர்சேஸ் செய்யலாம் என்று அங்கு நுழைந்தோம்.  எல்லாருக்கும் கொடுக்க காசி அன்னபூரணி விக்ரஹம், பூஜை செய்ய ஸ்டாண்ட், ஊதுபத்தி, வீபூதி  என்று நான் வாங்கினேன். மன்னியும் அன்னபூரணி விக்ரஹம் வாங்கினார். காசி இலுப்பச் சட்டி பிரசித்தம் என்று சாரதா அவளது தங்கை காயத்திரிக்காக வாங்கினாள். எனக்கும் பிடித்துப் போக நானும் சிறிய சைஸில்  ஒரு இலுப்பச் சட்டி வாங்கிக் கொண்டேன்.

செட்டியார் கடையிலிருந்து சுந்தர் மாமாவும் கிரிஜா மன்னியும் ஹோம குண்டம் வாங்க இன்னொரு கடைக்குச் செல்ல நாங்கள் ரூமிற்கு சென்றோம். மாடியிலிருந்து துணிகளை எடுத்து வந்து மடித்து வைத்து விட்டு, பால் வாங்கி காஃபி, டீ போடவும் கிரிஜா மன்னி, சுந்தர் மாமா வரவும் சரியாக இருந்தது.  எல்லாருக்கும் கொடுத்துவிட்டு நாங்களும் குடித்து விட்டு ரூமை க்ளீன் செய்து  கயா பயணத்திற்கு வேண்டிய சாமான்களை 'பேக் செய்து கொண்டோம். 5மணிக்கு கிளம்புவதாக இருந்ததாலும் 6 மணிக்குத் தான் எல்லாரும் கிளம்ப முடிந்தது. 

'கயா' வில் நாங்கள் செய்த பித்ரு காரியங்களை   அடுத்த பகுதியான 'குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 4  - கயா' வில் காணலாம்.

வாரணாசி என்னும் காசியில் ஆன செலவுகள்:

வரிசை எண்

விளக்கங்கள்

செலவுகள்

1

30 ஆம் தேதி 'மணி கர்நிகா காட்' துறைக்கு போட்டில் சென்று வர ஒருவருக்கு 300 ரூ வீதம் 10 பேருக்கு     

  3000.00

2

காசியில் ஹோட்டல் ரூமுக்கு ஒரு நாளைக்கு ஒரு ரூமுக்கு 2000 வீதம் 4000 ரூ 5 நாளைக்கு  20000 மற்றும்  கூடுதல் பெட் சேர்த்து

26000.00

3

காசியில் பித்ரு காரியங்கள் செய்து வைக்க ஒரு தம்பதிக்கு 50,000 வீதம் 5 தம்பதிகளுக்கு

                    250000.00

4

கோவிலுக்குப் போக வர 10 பேருக்கு ரிக்ஷா 

        400.00

5

ஆட்டோ செலவு

       750.00

6

காசி விஸ்வநாதர் தரிசனம் 

3000.00

7

லாக்கர்                                          

        500.00

8

லஸ்ஸி     

      400.00

9

அன்னபூரணி மற்றும் விசாலாட்சி கோவிலில்                        

     200.00

10

கோவிலிலிருந்து ரூமுக்கு வர ஆட்டோ  

   800.00

11

31 ஆம் தேதி 'பஞ்ச கங்கா காட்' துறைக்கு போட்டில் சென்று வர ஒருவருக்கு 400 ரூ வீதம் 10 பேருக்கு

4000.00

12

பஞ்ச தானத்துக்கு வேண்டிய சாமான்கள்

    400.00

14

சங்கர் வாத்தியாருக்கு 

 1000.00

15

கங்கா பூஜா

500.00

16

'போட்'காரருக்கு 

250.00

 

மொத்தம்

291200.00

வாரணாசி என் பார்வையில்:

வருணா நதியும் அஸி நதியும் இணையுமிடம் என்பதால் காசி வாராணாசி என்று பெயர் பெற்றது.


காசியில் பல்லி கத்தாது, மாடு முட்டாது, காக்கை கறையாது, கருடன் பறக்காது, பிணம் நாறாது என்கிறார்கள்.  பல்லியையும்  பார்க்கவில்லை. காக்கைகளும் பார்க்கவில்லை, பருந்துகளும் கண்ணில் படவில்லை. எனவே கத்துவது பற்றி கருத்து தெரிவிக்க முடியவில்லை.  வீதி எங்கும் மாடுகள் உலவிக்கொண்டு இருக்கின்றன. முட்டுமா?  முட்டாதா? என்னை முட்டவில்லை.

பிணம் நாறாது என்பதைக் கண்கூடாகக் கண்டோம். 'மணி கர்நிகா காட்' மற்றும் 'ஹரிச்சந்திரா காட் ' துறைகளில் தொடர்ந்து தகனம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.   வழிகளில் நடந்து செல்லும் போதே இறந்த உடல்களை சுமந்த படி ஆட்கள் போய்க்கொண்டே இருக்கிறார்கள். காசியில் உயிர் பிரிந்தால் நேரே மோக்ஷம் என்பது  நம்பிக்கை.  

முக்தி பவன் என்னும் மோக்ஷ இல்லம் காசியில் இருக்கிறது. இங்கு இறப்பைக் கொண்டாடுகிறார்கள். தன் இறுதி நாட்களைக் கழிக்க விரும்பும் ஏழைகளுக்கு இங்கு தங்க முன்னுரிமை அளிக்கிறார்கள்.

காசியில் நிறைய தமிழர்கள்  இருக்கிறார்கள். தமிழில் எழுதி இருப்பதை பல இடங்களில் பார்ப்பது கண்ணுக்கு விருந்தாக இருக்கிறது.  


காசி விஸ்வநாத காரிடார்' மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்கு இருக்கும் 'பனாரஸ் ஹிந்து யுனிவர்சிட்டி' ஆசியாவிலேயே மிகப் பெரிய யுனிவர்சிட்டி ஆகும். இங்கு தமிழ் படிப்பிற்காக 'சுப்ரமணிய பாரதியார்' பெயரில்  ஒரு இருக்கை நிறுவி கௌரவித்துள்ளது மத்திய அரசு. 

காசி முழுவதுமே எலெக்ட்ரிக் ரிக்ஷாக்கள் இருப்பது சிறப்பு. 

கங்கையை தினம் தோறும் சுத்தம் செய்கிறார்கள். மக்களும் மனது வைத்தால் புனித கங்கையைத் தூய்மையாகவும் தெளிவாகவும் துணிகள், குப்பைகள் மிதக்காமலும் பாதுகாக்க முடியும். செய்வோமா? செய்வீர்களா?

பயணங்கள் தொடரும்.

மாதங்கி ஜெயராமன்
பெங்களூரு.

மற்ற பகுதிகளுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 1 – இராமேஸ்வரம்
படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.        https://mathangiyinmanam.blogspot.com/2024/06/1_36.html

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 2 –  பிரயாக்ராஜ் என்னும் அலகாபாத்: 
படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 4 -  கயா: 
படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 5 -  தம்பதி பூஜை

படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
https://mathangiyinmanam.blogspot.com/2024/07/5_25.html

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 6 -  சமாராதனை

படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.


பயணங்கள் தொடரும். 

மாதங்கி ஜெயராமன்
பெங்களூரு.


6 comments:

  1. Your article brings all the vivid memories of my trip to Kasi 45 years back. Very elaborately written article. Enjoyable read.

    ReplyDelete
    Replies
    1. Thank you so much Mami. I am very happy that you could relate to your trip. Your comment means a lot to me

      Delete
  2. Very interesting write up. Was totally enjoyable reading it. The pictures enhance your writing. Very useful for those planning a trip. The part were Jayaram gets lost was hilarious.

    ReplyDelete
  3. மிகச் சிறப்பான பதிவு. புகைப்படங்களும் விளக்கங்களும் நிறைந்ததாய் படிப்பதற்கு சுவையாக இருக்கிறது. புகைப்படங்களில் அத்தனை பேரும் புன் சிரிப்புடன் இருப்பதும் மடிசார் பஞ்சகச்சம் சகிதம் கலாச்சாரப்படி இருப்பதும் அழகுதான் என்றாலும், எப்படி இத்தனை பேரும், இத்தனை சிரத்தையுடன் ஆகமக் காரியங்கள் அத்தனையையும் செய்தீர்கள் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியதும் உண்மை! இத்தனை புகைப்படங்கள் எடுத்த நீங்கள் தமிழ்ப் பெயர்ப் பலகையையும் எடுத்திருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும். போய் வந்த விவரங்களுடன், வரவு செலவு கணக்கையும் கொடுத்திருப்பது பலருக்கும் உதவியாக இருக்கும். 'என் பார்வையில்' என்று நீ கொடுத்திருப்பதை நான் மிகவும் ரசித்தேன். 5ம் பகுதியின் இறுதியில் மற்ற பதிவுகளின் லிங்கைக் கொடுத்திருப்பதும் பாராட்டுக்குரியது. தொடர்ந்து எழுது. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கமெண்ட் மிகவும் உற்காகமூட்டுவதாக இருக்கிறது. உங்கள் பாராட்டுக்களுக்கும் உங்கள் சஜஷனுக்கும் நன்றி அக்கா. உங்கள் ஆலோசனைப்படி தமிழ்ப் பலகைப் புகைப்படத்தையும் இணைத்துள்ளேன்.

      Delete

எங்கள் பெரியம்மா என்னும் சகாப்தம்

  எங்கள் பெரியம்மா சுப்பலக்ஷ்மி என்கிற சத்யபாமா: எங்கள் அம்மாவின் அக்கா ' சுப்பலக்ஷ்மி' என்கிற 'சத்யபாமா ' எல்லாராலும் '...